உள்ளூர் செய்திகள்

ரூபிமனோகரன் எம்.எல்.ஏ.

நாங்குநேரி தொகுதியில் 2-ம் கட்டமாக 'மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர் திட்டம்' - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அழைப்பு

Published On 2023-11-23 08:55 GMT   |   Update On 2023-11-23 10:04 GMT
  • நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் என்கிற திட்டத்தை தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் செயல்படுத்தி வருகிறார்.
  • இனிவரும் நாட்களில் நடைபெறும் மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சிகளில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் என்கிற திட்டத்தை தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் செயல்படுத்தி வருகிறார்.

2-ம் கட்டம்

ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி வாரியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தொகுதி மக்களுடன் அவர் தங்கி, அவர்களுடன் உணவருந்தி, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டு, நிவர்த்தி செய்து கொடுத்து வருகிறார்.

இதுவரையில், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

தற்போது, 2-ம் கட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. வருகிற டிசம்பர் முதல் வாரத்தில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இட்டமொழியில் 2-ம் கட்டமாக மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

அதைத்தொடர்ந்து, தொகுதியில் உள்ள பிற இடங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன.

இதுகுறித்து நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளருமான ரூபி மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:

கிராமப்புறங்களை அதிகம் கொண்ட நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முழுவதுமே நான் பயணித்துக் கொண்டிருந்தாலும், பொதுமக்களுடன் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இன்னும் நெருங்கிப் பழக, இந்தத் திட்டம் உதவுகிறது.

பொதுமக்கள் தங்கள் ஊரில் உள்ள குறைகள் மற்றும் தேவைகளை இந்த நிகழ்ச்சியின் போது மனுக்களாகத் தந்தால், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, நிறைவேற்றிக் கொடுக்கிறேன். பொதுமக்கள் அனைவரும் இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும், இனிவரும் நாட்களில் நடைபெறும் மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சிகளில், எங்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

வருகிற டிசம்பர் முதல் வாரத்தில் இட்டமொழியில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறவும் அழைக்கின்றேன்.

இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

Tags:    

Similar News