நாகையில், மாணவர்களுக்கு கல்வி கடன் முகாம்
- தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 18 வங்கிகள் பங்கேற்றன.
- கலந்தாய்வு உடனடியாக நடத்தப்பட்டு 3 வாரங்களில் கல்வி கடன் வழங்க நடவடிக்கை.
நாகப்பட்டினம்:
குடும்ப சூழல் மற்றும் பொருளாதார பின்னடைவின் காரணமாக உயர்கல்வியை தொடர்வதில் நெருக்கடியை சந்திக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கல்விக் கடன் முகாம் நடைபெற்றது.
இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், எம்.எல்.ஏ.க்கள் முகம்மது ஷா நவாஸ், நாகை மாலி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை வழங்கினர்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 18 வங்கிகள் இதில் பங்கேற்றன.
மாணவர்கள் அதிக அளவில் வருகை தந்து, கல்விக் கடன் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். மொத்தம் 304 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதற்கான கலந்தாய்வு உடனடியாக நடத்தப்பட்டு 3 வாரங்களில் கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் தெரிவித்தார்.
கல்விக் கடன் கேட்டு வங்கிகளுக்கு அலையும் நிலையை மாற்றி, ஒரே இடத்தில் வங்கிகளை வரவைத்து, கடன் வழங்கும் முறையில் ஒரு நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்தியதற்காக மாணவர்களும் பெற்றோரும் மகிழ்ச்சியடைந்தனர் என்று ஷா நவாஸ் எம்.எல்.ஏ தெரிவித்தார்.