உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் முதல்- அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி

Published On 2023-02-08 10:07 GMT   |   Update On 2023-02-08 10:07 GMT
  • விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
  • இறகுப்பந்து விளையாட்டில் 175 பேரும், கிரிக்கெட்டில் 22 அணிகளும் என மொத்தம் 1,060 பேர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இதில், கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடக்க உள்ளன. கிரிக்கெட் போட்டி மட்டும் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கிறது.

நேற்று காலை கலெக்டர் தீபக் ஜேக்கப் இந்த போட்டிகளை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நேற்று நடந்த போட்டியில், ஆக்கி விளையாட்டில் 12 அணிகளும், கால்பந்தில் பெண்கள் ஆறு அணிகளும், கூடைப்பந்தில் 16 அணிகளும், கைப்பந்தில் 14 அணியும், நீச்சல் போட்டியில், 200 பேரும், இறகுப்பந்து விளையாட்டில் 175 பேரும், கிரிக்கெட்டில் 22 அணிகளும் என மொத்தம் 1,060 பேர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு குழுப் போட்டியிலும் ஒரு சிறந்த ஒரு அணியும், தடகள விளையாட்டில் முதல் இடங்களில் வெற்றி பெறுபவர்களும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற உள்ளனர். வருகிற 13-ந் தேதி மற்றும் 14-ந் தேதி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடக்க உள்ளன.

Tags:    

Similar News