உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

Published On 2022-06-25 08:46 GMT   |   Update On 2022-06-25 08:46 GMT
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.
  • விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டர் தகவல் கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டு மாங்கனி கண்காட்சி மே மாதம் 15ம் தேதி தொடங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து வருகிறோம். இவ்வாண்டு மா அறுவடை முடிந்த நிலையில் கண்காட்சி தொடங்கி உள்ளது. கண்காட்சியில் வெளி மாநில மா வகைகளை தான் அதிக அளவில் இடம் பெற்றுள்ளது. இதே போல் மாங்கனி கண்காட்சியில் உள்ள அரசுத்துறை அரங்குகளில் தொடர்புடைய பொறுப்பு அலுவலர்களின் செல்போன் எண்கள் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

சில நேரங்களில் கூட்டம் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. எனவே, குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான அரிசியை விவசாயிகளே வழங்க தயாராக இருக்கிறோம். மேலும், மாவட்டத்தில் நெல், ராகி உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் சிறந்த சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்க வேண்டும். மார்கண்டேயன் நதியில் இருந்து படேதலாவ் ஏரிக்கு செல்லும் கால்வாய்களை தூர்வார வேண்டும். ஒவ்வொரு முறையும் தண்ணீர் வரும் போது தூர்வாரும் பணிகள் மேற்கொள்வது பயனற்றது.

தென்பெண்ணை ஆற்றில் செல்லும் தண்ணீரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்திப்பள்ளம் ஏரி நிரம்பி உள்ளதால், வாய்க்கால்கள் தூர்வார வேண்டும். மாமரங்களுக்கு மருந்து தெளிக்கும் ஸ்பிரே இயந்திரம் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கு வதைவிட விவசாயிகளுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

இது குறித்து கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பதிலளித்து பேசுகையில், அடுத்த ஆண்டு முதல் மே மாதம் 15-ந் தேதியே மாங்கனி கண்காட்சி தொடங்கப்படும். மானியத் திட்டங்கள் தொடர்பான புத்தகம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும். கெலமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்யப்படும்.

ஏற்கனவே நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் படி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் குறைதீர் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்குவது தொடர்பாக, அலுவலர்களுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளில் ராகி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்புத்துறை மூலம் சோளம், தாது உப்பு உள்ளிட்டவை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். தென்பெண்ணை ஆற்று தண்ணீர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் நிரப்பப்படுகிறது என்றனர்.

Similar News