கோத்தகிரியில் சோலை காடுகள் பாதுகாப்பு மையம்
- ரூ.5 கோடி செலவில் அமைகிறது
- 286 ஏக்கரில் சோலை காடுகள் அமைந்துள்ளன.
ஊட்டி:
தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப் பகுதிகளில் சோலைக் காடுகள் காணப்படுகின்றன. தாவரவியல் ரீதியாக, பல்வேறு தனி சிறப்புகளை கொண்ட இந்த மரங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை, வனத் துறை முடுக்கி விட்டுள்ளது.
வனப் பகுதிகளில் சோலைக் காடுகள் பரப்பளவை அதிகரிப்பது, மரங்கள் வெட்டப்படுவதை தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.அடுத்த கட்டமாக, சோலைக் காடுகள் பாதுகாப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் 'லாங்வுட்' வனப் பகுதியில், 286 ஏக்கரில் சோலை காடுகள் அமைந்துள்ளன. தனித்துவமான சூழலில், பல்வேறு வகை உள்ளூர் உயிரினங்களை, அக்காடுகள் பாதுகாத்து வருகின்றன.இதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறியும் வகையில், கோத்தகிரியில் சோலை காடுகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 5.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப் பட்ட வரைவு திட்டம், அரசுக்கு அனுப்பப்பட்டது. சோலை காடுகள் குறித்த தகவல் மையம், நூலகம், பதப்படுத்தப்பட்ட அரிய வகை தாவரங்களின் மாதிரிகள் அடங்கிய காட்சிக்கூடம் இங்கு அமைய உள்ளன. வரைவு திட்டத்துக்கு அரசின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.