கம்பம்பள்ளியில் அரசு பள்ளி மாணவர்கள் திடீர் போராட்டம்
- தேங்கிய மழைநீரால் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
- மாணவ, மாணவிகள் கல்வி கற்க முடியாமல் அவதிப்பட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே கம்பம்பள்ளி அரசு பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் ேதங்கி காணப்படுகிறது. மழைநீர் வெளியேற முடியாமல் குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மாணவ, மாணவிகள் கல்வி கற்க முடியாமல் அவதிப்பட்டனர்.
கம்பம்பள்ளி வளாகத்தில் மழை தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இந்த மழை வெள்ளத்தால் பள்ளி வகுப்பறைக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து அதிகாரியிடம் பல முறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் இன்று காலை பள்ளி முன்புள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தேங்கியுள்ள மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். இதனால் போராட்டத்தை கைவிட்டு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றனர்.