உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

ஜோதிப்பட்டி கிராமத்தில் ஸ்ரீவேடியப்பன், ஸ்ரீமுத்துவேடியம்மாள் மகா கும்பாபிஷேக விழா

Published On 2022-07-14 09:54 GMT   |   Update On 2022-07-14 09:54 GMT
  • இன்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சாஸ்திர நாமம், மகா சாந்திஹோமம், வேத பாராயணம், பூர்ணாஹதி நடந்தது.
  • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஜோதிப்பட்டி கிராமத்தில் 400 வருட பழைமையான ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வேடியப்பன், ஸ்ரீ முத்துவேடியம்மாள், ஸ்ரீஈஸ்வரன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீ காளியம்மன், ஐயனார் நவக்கிரகம், நாகர் ஆகிய கோவில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

இந்த விழா நேற்று முன்தினம் 11-ந் தேதி கணபதி பூஜையுடன்தொடங்கியது. இன்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சாஸ்திர நாமம், மகா சாந்திஹோமம், வேத பாராயணம், பூர்ணாஹதி நடந்தது.

இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை ஊர் கவுண்டர்கள், முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார்.

பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஶ்ரீ விநாயகர், ஸ்ரீ வேடியப்பன், ஸ்ரீ முத்துவேடியம்மாள், ஸ்ரீஈஸ்வரன், ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ காளியம்மன், ஐயனார் நவக்கிரகம், நாகர் ஆகிய சுவாமிக்கு பல்வேறு திரவியங்கள், பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி காலை முதல் பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News