மலை கிராமங்களில் கலெக்டர் ஆய்வு
- பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள், குடிநீர், தெருவிளக்கு குழந்தைகளின் கல்வி திறன் குறித்து கேட்டறிந்தார்.
- அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மிகவும் பழுதடைந்துள்ளது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா நாட்றாம்பாளையம் ஊராட்சி கேரட்டி மற்றும் தொட்டமஞ்சி ஊராட்சி கெம்பக்கரை கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மற்றும் இருளர் இன மக்கள் குடியிருப்புகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டார்.
நாட்றாம்பாளையம் ஊராட்சி கேரட்டி இருளர் இன மக்கள் குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு அங்கு வசிக்கும் மக்களிடம் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு குழந்தைகளின் கல்வி மற்றும் நியாயவிலைகடையில் உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் வாழ்வாதரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து இங்குள்ள குடியிருப்பு வீடுகள் மிகவும் பழுதடைந்துவுள்ள நிலையில் மழை காலங்களில் மிகவும் சிரமமாக உள்ளது என இருளர் இன மக்கள் தெரிவித்தனர். உடனடியாக வீடுகள் பழுதுபார்ப்பு மற்றும் புதிய குடியிருப்புகள் கட்ட அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
மேலும் இங்குள்ள குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்பவேண்டும். குடியிருப்பு பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு போதிய மருத்துவ வசதி, மற்றும் தடுப்பூசி உரிய காலத்தில் செலுத்திக்கொள்ள வேண்டும். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள் அஞ்செட்டியில் நடைபெறும் பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமிற்கு சென்று உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளின் வாசிப்பு திறன் மற்றும் கல்வி திறனை கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் அஞ்செட்டியில் நடைபெற்ற பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொள்ள சிறப்பு பஸ்களில் சென்று மருத்துவ சிகிச்சை பெற்றவர்களிடம் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து கலெக்டர் தொட்டமஞ்சி ஊராட்சி கெம்பக்கரை கிராமத்தில் வசிக்கும் 37 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள், குடிநீர், தெருவிளக்கு குழந்தைகளின் கல்வி திறன் குறித்து கேட்டறிந்தார். அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மிகவும் பழுதடைந்துள்ளது. தங்களுக்கு புதிய வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
புதிய வீடுகள் வழங்குவதற்கு போதிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போல குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை திருமணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குடியிருப்புகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, அஞ்செட்டி தாசில்தார் அனிதா, துணை தாசில்தார்கள் பன்னீர்செல்வம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.