உள்ளூர் செய்திகள்

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் சிறைத்தண்டனை- அபராதம் விதிக்கப்படும்

Published On 2022-09-20 15:04 IST   |   Update On 2022-09-20 15:04:00 IST
  • அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அது குற்றம்.
  • வாங்க மறுத்தால் 3 வருட சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

தருமபுரி

தருமபுரி பகுதியில் 10 ரூபாய் நாணயங்களை பல்வேறு தரப்பினரும் வாங்க மறுப்பது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் தருமபுரியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் மேலாளர் கூறியுள்ளதாவது:-

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் பரவிய வண்ணமே உள்ளது. இன்றளவும் பல கிராம பகுதிகளில் உள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயம் மறுக்கப்பட்டு வருகிறது.

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி முதன் முதலில் 2005 -ம் ஆண்டு வெளியிட்டது. அதனை தொடர்ந்து 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் வரத்தொடங்கியது. புழக்கத்திற்கு வந்த சில காலங்களில் அதன் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு ஒரு காரணமாக அமைந்தது நாணயத்தின் டிசைன்.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகாமல் இருக்க மக்கள் மத்தியில் அது போலியான நாணயம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. ஆனால் உண்மை என்னவென்றால் ரிசர்வ் வங்கி இதுவரை பதினான்கு வகையான 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளது, ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து வேறு மாதிரியான வகையில் உள்ளது.

எனவே மக்கள் அதனை போலியான நாணயம் என நம்பத்தொடங்கி அது காலம் செல்ல செல்ல பத்து ரூபாய் நாணயத்தை வங்கிகள் நிறுத்த போகின்றன என்றும் அவை செல்லாது என்றும் பல வதந்திகள் கிளம்பின. இதற்கெல்லம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கி நேரடியாக தலையிட்டு பல்வேறு நடவெடிக்கைகள் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டது.

இரண்டு நாணயமும் அரசால் அங்கீகரிக்கப்பட்டவையே. அதற்கும் ஒரு படி மேலே சென்று 10 ரூபாய் நாணயம் செல்லும் என பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்தன. அதன் படி மக்களின் தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகள் விடுத்து அதனை பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தின. 10 ரூபாய் நாணயங்களை பற்றி சந்தேகத்துடன் வரும் மக்களுக்கு புரிய வைக்கும் படி வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டன.

மேலும் 14440 என்ற எண்ணைத் தொடர்புக்கொண்டால் நமக்கு ஏற்படும் 10 ரூபாய் நாணயத்தை பற்றிய சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துக்கொள்ளலாம். https://www.rbi.org.in/ என்ற இணையதளத்திலும் இது தொடர்பாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகை 10 ரூபாய் நாணயங்களுமே செல்லும். அவற்றை செல்லாது என கூறுவதோ, அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ, வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.

இந்திய தண்டனைச் சட்டம் 124-ஏ - வின் படி ஒருவர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அது குற்றம். அந்த குற்றத்திற்கு 3 வருட சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

மேலும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயத்தை அவமதிக்கும் வகையில் நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீது புகார் அளித்தால் அரசால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வழி உள்ளது.

இவ்வாறு அந்த வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News