கடலூர் மாநகராட்சியில் பன்றிகள், மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: மேயர் கடும் எச்சரிக்கை
- போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அனைத்து தரப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.
- மாடுகளை மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் பன்றிகள், ஆடுகள் மற்றும் மாடுகள் அதிக அளவில் வெளியில் சுற்றுவதால் அடிக்கடி வாகன விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அனைத்து தரப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் பன்றிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் இன்று மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாநகராட் சிக்குட்பட்ட 45 வார்டு பகுதிகளில் தெருக்களில் கட்டி இருக்கும் மற்றும் சுற்றுத் திரியும் பன்றிகள், ஆடுகள் மற்றும் மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் உடனடியாக பிடித்து செல்ல வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் தெருக்களில் கட்டியிருக்கும் மற்றும் சுற்றித்திரியும் பன்றிகள், ஆடுகள் மற்றும் மாடுகளை மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் உரிமை யாளர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகின்றது. ஆகையால் கால்நடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.