உள்ளூர் செய்திகள்

அயர்ந்து தூங்கிய நண்பரை கம்பியால் அடித்துக் கொன்றேன் தொழிலாளி வாக்குமூலம்

Published On 2022-09-08 14:57 IST   |   Update On 2022-09-08 14:57:00 IST
  • இன்ஸ்பெக்டரின் மருமகனான என்னை தாக்கியதால் கொலை செய்ய திட்டமிட்டேன்.
  • 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கோவை:

தஞ்சாவூர் அருகே உள்ள ராஜாபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 30). இவர் கோவை கணபதியில் தங்கி இருந்து ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

அப்போது அதே தொழிற்சாலையில் வேலை பார்த்த திருவையாறை சேர்ந்த தற்போது சரவணம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வரும் கார்த்திகேயன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று சரவணம்பட்டியில் இருந்த ெஜகதீசனை, கார்த்திகேயன் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார். பின்னர் அவர் தலைமறைவானார்.

இது குறித்து கோவில் பாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் போலீசா ரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-

நான் சரவணம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அப்போது எனது தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்த ஜெகதீசனுடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஓரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நட்பாக பழகி வந்தோம். இதன் காரணமாக அவர் அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து சென்றார். ஜெகதீசன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக திட்டமிட்டு இருந்தார். இதற்காக அவர் பாஸ்போர்ட் எடுத்து வைத்து இருந்தார். அதனை அவரது வீட்டில் வைத்தால் தொலைந்து விடும் என்பதால் என்னிடம் கொடுத்து எனது வீட்டில் வைக்க சொன்னார். நானும் அதனை வாங்கி பத்திரமாக வைத்தேன். ஆனால் எப்படியோக பாஸ்போட் தொலைந்து விட்டது.

அதன் பின்னர் ஜெகதீசன் என்னிடம் வந்து பாஸ்போர்ட்டை திருப்பி தரும்படி கேட்டு வந்தார். நான் திருப்பி கொடுக்காததால் எங்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

வெளிநாட்டில் வேலைக்கு செல்ல திட்டமிட்டு இருந்த அவர் கடந்த மாதம் வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊருக்கு சென்றார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு என்னை தொடர்பு கொண்ட ஜெகதீசன் இன்னும் 3 நாளில் கோவைக்கு வருவேன். எனது பாஸ்போட்டை திருப்பி கொடுத்து விடு என்று கூறினார்.

அதன்படி அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். பின்னர் எனது வீட்டில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று நாங்கள் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றோம். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு நடந்து சென்றோம். அப்போது ஜெகதீசன் மீண்டும் என்னிடம் பாஸ்போர்ட்டை கேட்டு தகராறு செய்தார். அப்போது நடுரோட்டில் வைத்து என்னை தாக்கினார். இதனால் அவர் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் 2 பேரும் எனது வீட்டிற்கு சென்றோம். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ஜெகதீசன் அயர்ந்து தூங்கினார். இன்ஸ்பெக்டரின் மருமகனான என்னை அவர் நடுரோட்டில் வைத்து தாக்கியதால் அவரை கொலை செய்ய சரியான நேரம் இது தான் என திட்டமிட்டேன்.

அதன்படி எனது மனைவி மற்றும் குழந்தைகளை அருகே உள்ள வீதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். பின்னர் வீட்டில் இருந்த இருப்பு கம்பியை எடுத்து அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த ஜெகதீசனின் தலையில் தாக்கினேன். இதில் ரத்த வெள்ளதில் அவர் துடிதுடித்து இறந்தார். பின்னர் நான் எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்கு சென்றேன். அங்கு பஸ்சுக்காக காத்து இருந்தேன். நான் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் நிற்பதை அறிந்த போலீசார் விரைந்து வந்து என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட கார்த்தி கேயனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

Tags:    

Similar News