உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில்மூழ்கி பள்ளி மாணவன் சாவு

Published On 2023-05-01 08:10 GMT   |   Update On 2023-05-01 08:10 GMT
  • எதிர்பாராத விதமாக தர்ஷன் ஆற்றில் மூழ்கியுள்ளார்.
  • சிகிச்சை பலனின்றி தர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒகேனக்கல்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள அவளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் தர்ஷன் (வயது15) பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார்.

தனது குடும்பத்தினருடன் நேற்று பஸ்ஸில் ஒகேனக்கல் வந்துள்ளனர். ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் ஊட்டுமலை பரிசல் துறை காவிரி ஆற்றில் குடும்பத்தினருடன் குளித்தனர்.

அப்போது தர்ஷன் ஆழமான பகுதியில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தர்ஷன் ஆற்றில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் உடனடியாக தர்ஷனை மீட்டனர்.

அதிக அளவில் தண்ணீர் குடித்ததால் மயங்கிய நிலையில் இருந்த தர்ஷனை உடனடியாக மீட்டு ஊட்டமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழைத்து சென்று முதலுதவி அளித்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் பெங்களூர் நகரை சேர்ந்த தேவராஜ் மகன் சேவியர் (18). இவர்பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தனது நண்பர்கள் நான்கு பேருடன் நேற்று ஒகேனக்கல் வந்துள்ளார்.

அப்போது கோத்திக்கல் காவிரி ஆற்றில் குளித்த போது சேவியர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்து நண்பர்கள் அளித்த புகாரின் பேரில் ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சேவியரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News