உள்ளூர் செய்திகள்

திமுக எம்எல்ஏ சரவணகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை



தி.மு.க.வை கண்டித்து பெரியகுளத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-09 13:15 IST   |   Update On 2022-12-09 13:15:00 IST
  • பூசாரியின் வேஷ்டியை இழுத்து அவமதித்ததாகவும், ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தென்கரை காந்தி சிலை அருகில் இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்து எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.

பெரியகுளம்:

தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருநாளன்று மகா தீபம் ஏற்றுவதில் தி.மு.க.வினருக்கும், ஓ.பி.எஸ். மகன் ஜெயபிரதீப் தலைமையிலான அன்பர் குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது எம்.எல்.ஏ. சரவணகுமார் பூசாரியின் வேஷ்டியை இழுத்து அவமதித்ததாகவும், ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தென்கரை காந்தி சிலை அருகில் இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் கண்டன உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கடவுள் மறுப்புக் கொள்கையில் இருக்கும் தி.மு.க.வினருக்கு கோவிலில் என்ன வேலை என்றும், இப்படி கும்பலாக வந்து ஆகமவிதிகளுக்கு எதிராக அர்ச்சகரின் வேஷ்டியை பிடித்து இழுத்து இந்து மக்களின் மனதை புண்படுத்திய செயல் கண்டிக்கத்தக்கது என்றும் பேசினார்.

மேலும் இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்து எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.

Tags:    

Similar News