உள்ளூர் செய்திகள்

கனமழை: உடுமலை பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

Published On 2024-05-17 11:30 IST   |   Update On 2024-05-17 11:31:00 IST
  • சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
  • வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமணலிங்கேசுவரர் கோவில் உள்ளது. கோவிலின் அடிவாரத்தில் இருந்து 950 மீட்டர் உயரத்தில் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.

அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறவும், பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் நீர் வரத்து இல்லாமல் வறண்டு வந்த பஞ்சலிங்க அருவிக்கு கடந்த 4 நாட்களாக நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதற்கு குருமலை, குலிப்பட்டி, மேல் குருமலை உள்ளிட்ட அருவியின் நீராதாரங்களில் தொடர்ந்து மழைப்பொழிவு ஏற்பட்டு வருவதே காரணமாகும்.

வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அருவிக்கு குடும்பத்தோடு வருகை தந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்தோடு குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது.

Tags:    

Similar News