உள்ளூர் செய்திகள்

வடகிழக்கு பருவமழை தீவிரம்: சென்னையில் பரவலாக பெய்த கனமழை

Published On 2022-11-10 13:54 GMT   |   Update On 2022-11-10 13:54 GMT
  • இன்று முதல் 14-ந்தேதி வரை பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்
  • சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகதி வலுவடைய உள்ளதால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 14-ந்தேதி வரை 5 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று கடலோர தமிழகம், உள்மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. தலைநகர் சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. எழும்பூர், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், பெரியமேடு, அண்ணாசாலை, திருவல்லிக்கேணி வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சென்னையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News