பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகைக்கான காசோலைகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கிய போது எடுத்த படம்.
கிருஷ்ணகிரியில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ரூ.7.19 லட்சம் நலத்திட்ட உதவிகள்
- 10 பேருக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் திருமண உதவி தொகை வழங்கப்பட்டது.
- நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது.
இதில் பொதுமக்கள் தையல் எந்திரங்கள், உதவி தொகைகள், சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 307 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார். தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம் ஒரு மாணவருக்கும், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம் ஒரு மாணவிக்கும், மூன்றாம் பரிசு தலா ரூ.2 ஆயிரம் வீதம் 2 மாணவர்களுக்கும் மற்றும் சிறப்பு பரிசு தலா ரூ.2 ஆயிரம் வீதம் 2 மாணவிகளுக்கு ரூ.4 ஆயிரம் என மொத்தம் 6 மாணவ, மாணவிகளுக்கு ரூ.16 ஆயிரத்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.25 ஆயிரமும், தலா ரூ.50 ஆயிரம் வீதும் 9 பேருக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரமும் என மொத்தம் 10 பேருக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் திருமண உதவி தொகை, தலா ரூ.6,800 வீதம் 36 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 800 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் என மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 19 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தேன்க னிக்கோட்டை தாலுகா பிதிரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மஞ்சுளா என்பவருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, தமிழ்வளர்ச்சித்துறை உதவி ஆணையர் பவாணி, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் செண்பகவள்ளி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.