உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்கள்

அரசு மது பானங்கள் கள்ளத்தனமாக பெட்டிக்கடைகளில் விற்பனை- 2 பேர் கைது

Published On 2022-12-02 11:42 GMT   |   Update On 2022-12-02 11:42 GMT
  • சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், தியாகராஜன் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர்.
  • கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந்து 135 அரசு மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி கம்மாள தெருவில் உள்ள ஒரு பெட்டிக் கடை மற்றும் போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை என இரண்டு இடங்களில் அரசு மதுபானங்கள் இரவு பகலாக விற்பனை செய்வதாக ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர் மற்றும் தியாகராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

எனவே, இவர்களது தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கம்மாள தெருவில் உள்ள பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக அரசு மதுபான பாட்டில்களை விற்பனை செய்த ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்(வயது23), போந்தவாக்கம் கிராமத்தில் பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக அரசு மதுபான பாட்டில்களை விற்பனை செய்த பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருசங்கு(வயது38) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், இவர்கள் இருவரிடமும் இருந்து 135 அரசு மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். குற்றவாளிகள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

Similar News