ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாளர்கள் அலட்சியத்தால் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்
- 24 மணிநேரமும் செயல்படும் இந்த ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளதால் பொதுமக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர்
- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு தடையின்றி சிகிச்சை வழங்க வேண்டும்
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். தினசரி வெளிநோயாளிகளாக 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கர்ப்பிணி பெண்கள் இங்கு பரிசோதனைக்கு வருகின்றனர்.
24 மணிநேரமும் செயல்படும் இந்த ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் பொதுமக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர். மேலும் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களிடம் நர்சுகள் அலட்சியமாகவே நடந்து கொள்கின்றனர். இங்கு பிரசவத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளநிலையில் ஊழியர்களின் அலட்சிய போக்கால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் நோயாளிகளின் கழிப்பறை சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இங்குள்ள மருத்துவ பணியாளர்கள் வெளிநோயாளிகளாக வருபவர்களை நீண்டநேரம் காத்திருக்க வைக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு தடையின்றி சிகிச்சை வழங்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.