உள்ளூர் செய்திகள்

முத்துப்பேட்டையில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம்

Published On 2023-09-23 09:50 GMT   |   Update On 2023-09-23 09:50 GMT
  • பதற்றமான பகுதிகளில் வேலிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
  • 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

முத்துப்பேட்டை:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, அரமங்காடு, கோவிலூர், மருதங்காவெளி உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்கா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக ஆசாத்நகர் சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது. ஊர்வலத்தை முன்னிட்டு போலீஸ் துறை சார்பில் கடந்த ஒரு வார காலமாக பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட வருவாய் துறை சார்பிலும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது. ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள். பதற்றமான பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஊர்வலத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News