திருமணஞ்சேரி கோவிலில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
- திருமண வரம் அருளும் உத்வாகநாதர் கோவிலில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
- திருமாங்கல்யம், ஆடைகள், மாலைகள் ஆகியவற்றை சீதனமாக அறநிலையத்துறை அதிகாரிகள் வழங்கினர்.
குத்தாலம்:
இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் இந்து சமயத்தை சேர்ந்த ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கோவில்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற திருமண வரம் அருளும் உத்வாகநாதர் சுவாமி கோவிலில் 4 ஜோடிகளுக்கு நேற்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஜோடிக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள திருமாங்கல்யம், ஆடைகள், முகூர்த்த மாலைகள், சீர்வரிசையை சீதனமாக அறநிலையத்துறை அதிகாரிகள் வழங்கினர்.
இதில், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், கோவில் செயல் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், காங்கிரஸ் மாவட்ட துணை செயலாளர் ஜம்புகென்னடி, மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ், ஒன்றியக்குழு உறுப்பினர் வடவீரபாண்டியன் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.