கேரள முன்னாள் மந்திரி கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்
- கேரளாவின் முன்னாள் மந்திரி கொடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்.
- கொடியேரி பாலகிருஷ்ணன் மிக உறுதியான கம்யூனிச கொள்கை படிப்பு உடையவர்.
சென்னை:
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன்(68), உடல்நலக் குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், புற்றுநோய் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த கொடியேரி பாலகிருஷ்ணன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
கண்ணூரைச் சேர்ந்தவரான அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக 15 ஆண்டு காலம் பதவி வகித்தவர். கடந்த 2006 - 2011 வரை அச்சுதானந்தன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசில் உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியாக பதவி வகித்தார்.
எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் கொடியேரி பாலகிருஷ்ணன் மிக உறுதியான கம்யூனிச கொள்கை படிப்பு உடையவர்.
இவருக்கு பினிஷ் கொடியேரி, பினாய் கொடியேரி என்ற 2 மகன்கள் உண்டு. நாளை 3 மணியளவில் தலைச்சேரியில் உள்ள டவுன்ஹாலில் அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.