முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24-ந் தேதி கோவை வருகை
- பகுதி செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
- இரவு கோவையில் இருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.
கோவை:
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 24-ந் தேதி கோவை வருகிறார்.
கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன் மகள் பூப்புனித நன்னீராட்டு விழா வருகிற 24-ம் தேதி (புதன்கிழமை) சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு அன்று மாலை வருகிறார்.
பின்னர் விழாவில் பங்கேற்று விட்டு அன்றைய தினம் இரவு கோவையில் இருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.
எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு இன்று கோவை-ஒசூர் ரோடு அ.தி.மு.க. அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் பகுதி செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில், கோவைக்கு வருகை தரும் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், தொண்டர்கள் என அனைவரும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதில் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் மற்றும் பகுதி செயலாளர்கள, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.