ஊட்டியில் குவிந்த வெளிமாநில சுற்றுலாபயணிகள்
- கண்ணாடி மாளிகையில் செல்பி எடுத்து ரசித்தனர்.
- இத்தாலியன் பூங்கா ஆகிய இடங்களை கண்டு ரசித்து புல் மைதானங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.
ஊட்டி,
இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
தற்போது சமவெளி பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் ரம்மியமான சூழ்நிலை நிலவும் ஊட்டிக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
இவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்து இங்கு நிலவும் அமைதியான மற்றும் குளிர்ச்சியான காலநிலையை அனுபவித்து வருகின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, இத்தாலியன் பூங்கா ஆகிய இடங்களை கண்டு ரசித்து புல் மைதானங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.
கண்ணாடி மாளிகையில் பராமரிக்கப்படும் வண்ண மலர்களை பார்வையிட சுற்றுலாபயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதுடன் செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்கிறார்கள். விரைவில் ஊட்டியில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் தற்போதே சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.