உள்ளூர் செய்திகள்

மின்வாரியத்தில் வயர்மேன்களுக்கான பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும்

Published On 2023-01-02 09:59 IST   |   Update On 2023-01-02 09:59:00 IST
  • வயர்மேனாக நியமிக்கப்படுபவர்கள் குறிப்பிட்ட ஆண்டை கடந்ததும் வயர்மேனாகவே இருந்து வருகின்றனர்.
  • களப்பணி தொழிலாளர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

திருப்பூர் :

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வயர்மேன் பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும் என்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மின்சாரத்துறை அமைச்சருக்கு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. சார்பில் இணைப்பொதுச்செயலாளர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் காலியாக உள்ள மின்பாதை ஆய்வாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வயர்மேன் பதவியிலிருந்து மின்பாதை ஆய்வாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். மேலும் திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் பதவி கடந்த 2 மாதங்களாக காலியாக உள்ளதை காரணம் காட்டி வயர்மேன் பதவி உயர்வு உள்ளிட்ட பணிகளை நிறுத்தி வைத்துள்ளதை ஏற்க முடியாது. காலதாமதம் இன்றி வயர்மேன் பதவியிலிருந்து மின்பாதை ஆய்வாளர் பதவி உயர்வு ஆகிய பணிகளை விரைந்து செய்ய வேண்டும்.

திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் வயர்மேன் பற்றாக்குறையால் மின் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் புதிய மின்சார இணைப்புகள், மின்மாற்றிகள், மின் கம்பங்கள் அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. மின் வாரியத்தில் பல ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் களப்பணி தொழிலாளர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் அவினாசி, திருப்பூர், ஊத்துக்குளி உள்ளிட்ட கோட்டங்களில் 75-க்கும் அதிகமான இடங்களில் பிரிவு அலுவலகங்கள், துணை மின் நிலையங்கள் உள்ளன. இங்குள்ள 15 ஆயிரத்திற்கும் அதிகமான மின்மாற்றிகளை (டிரான்ஸ்பார்மர்களை) மின்பாதை ஆய்வாளர் பராமரித்து வந்தனர். மின்பாதை ஆய்வாளருக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு உதவியாளர் (ஹெல்பர்) இருந்தனர். இதனால் மின்தடை ஏற்பட்டாலும், உடனடியாக சரி செய்து தடையில்லா மின்சாரம் கிடைத்தது.

இந்தநிலையில் பதவி உயர்வு பெற்–றும் விருப்ப மாறுதலிலும், பணி ஓய்வு பெற்றும் ஏராளமான மின்பாதை ஆய்வாளர்கள் சென்றுவிட்டதால் சில ஆண்டுகளாக இப்பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மின்பாதை ஆய்வாளர் பணியாற்றக்கூடிய வட்டத்தில் தற்போது போதுமான மின்பாதை ஆய்வாளர் இ்ல்லை. உதவியாளருக்கு அடுத்த நிலையில உள்ளவர்கள் பணியாளர்கள் தற்போது அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிலும் போதுமானவர்கள் இல்லாததால் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

திருப்–பூர் மாவட்டத்தில் புதிய மின்சார இணைப்புகள், மின்மாற்றிகள், மின் கம்பங்கள் பராமரிப்பின்றி உள்ளன. புதிய மின்கம்பங்களுக்காக, மின்சார வாரியத்தில் பணம் செலுத்தி பல ஆண்டுகளாகியும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மின்கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடை  உடனுக்குடன் சரி செய்யப்படுவதில்லை. மின்விபத்துகள் ஏற்படும் போது குறித்த நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதில்லை.

இந்த நிலையில் மின்சார வாரியத்தில் கடந்த 1987-ம் ஆண்டு ஒரு லட்சத்து 62 ஆயிரம் மின் பணியாளர்கள் பணிபுரிந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 70 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது. வயர்மேனாக நியமிக்கப்படுபவர்கள் குறிப்பிட்ட ஆண்டை கடந்ததும் வயர்மேனாகவே இருந்து வருகின்றனர்.

எனவே உடனடியாக திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் காலியாக உள்ள மின்பாதை ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு திருப்பூர் மின்பகிர்மான வட்டத்திலுள்ள வயர்மேன்களுக்கு விரைவாக பதவி உயர்வு வழங்கவும், காலதாமதம் இன்றி திருப்பூர் மின்பகிர்மான வட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளரை நியமிக்கவும் உரிய தீர்வு காண ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News