குடும்ப ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று
- கடந்த 1ம் தேதி முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- இதற்கு சேவை கட்டணமாக ரூ.70-ஐ தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
கிருஷ்ணகிரி,
தமிழக அரசு பணிக்கால ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு தபால்காரர் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று வீடு தேடி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு பணிக்கால ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் கடந்த 1-ந் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே, தங்களது உயிர்வாழ் சான்றிதழை, டிஜிட்டல் முறையில் தபால்காரர்கள் முலம் சமர்ப்பிப்தற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், இந்திய அஞ்சல் துறையின் கீழ செயல்படும் இந்தியா போஸ்ட் மேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதியன்று கையெழுத்தாகி உள்ளது.
இந்த ஆண்டு சுமார் 7 லட்சத்து 198 தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், கடந்த 1ம் தேதி முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேரில் சென்று உயிர்வாழ சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் "இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி", ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்ட்டுள்ளது.
இதற்கு சேவை கட்டணமாக ரூ.70-ஐ தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். கடந்த ஆண்டு சுமார் 1.75 லட்சம் தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே, தங்களது உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பித்தனர்.
மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய அஞ்சல் துறையின் சார்பில், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நாடு தழுவிய அளவில் 2018-ம் அண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதியன்று தொடங்கப்பட்டு இந்த குறுகிய காலத்தில், நாட்டின் ஒவ்வொரு மூலம் முடுக்கிலும் உள்ள ஒரு லட்சத்து 36 ஆயிரம் அஞ்சலகங்களுக்கு வங்கி சேவைகளை விரிவுப்படுத்தி, 7 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கி உள்ளது.
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கிருஷ்ணகிரி கோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் மூலமாகவும், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ள 450க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலமாகவும் வங்கி மற்றும் இதர சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தமிழக அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 32 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.