உள்ளூர் செய்திகள்

டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2022-08-28 09:21 GMT   |   Update On 2022-08-28 09:21 GMT
  • வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகமானது. இதனால் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
  • பாதிப்பு ஏற்படுமோ என்று பொதுமக்களும், விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது.

பின்னர் இரவில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகமானது. அணையின் அருகில் உள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீரும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 77 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனிடையே தமிழகத்தின் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும் கால்வாய் பாசன பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு கால்வாய் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் வினாடிக்கு 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் 120 அடியிலேயே நீடிக்கிறது.

இதனால் அணை கடல் போல காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி நீர்வளத்துறை சார்பில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்ட கலெக்டர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பாக அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே பொதுப்பணித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

எனவே காவிரி கரையோரமாக வசிப்பவர்கள், தாழ்வான இடங்க ளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்ப டுகிறார்கள் என்று கூறப்பட்டு ள்ளது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் திறப்பால் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, திருவையாறு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வாழைமரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதேப்போல் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கால் சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகளை வெள்ளநீர் சூழந்து பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

தற்போது மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மீண்டும் அதுபோல் பாதிப்பு ஏற்படுமோ என்று பொதுமக்களும், விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News