உள்ளூர் செய்திகள்

சூளகிரி பகுதியில் கொத்தமல்லி அறுவடை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை படத்தில் காணலாம்.


கீரைகளை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

Published On 2023-09-02 15:47 IST   |   Update On 2023-09-02 15:47:00 IST
  • கொத்தமல்லி, புதினாவை நம்பியே விவசாயிகள் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிர் செய்து வருகின்றனர்.
  • நவீன மாயமாக்கப்பட்ட மார்க்கெட்டு ஒன்றை அமைத்து தரவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதி 42 ஊராட்சிகள், 417 கிராமங்களை கொண்டுள்ளது.

மலைகள், குன்றுகள் ஏற்ற தாழ்வு கொண்ட நிலபரப்பான சூளகிரி பகுதியில் தென்பெண்ணையாற்றின் மூலம் கிடைக்கும் தண்ணீர் மூலமும் மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலமும் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை விவசாயமாக கொத்தமல்லி, புதினா மற்றும் காய்கறி, பூக்கள் பயிரிடப்படுகின்றன.

இதில் சூளகிரி ஒன்றிய பகுதியான பி.எஸ்.திம்ம சந்திரம், காட்டு நாயக்கன் தொட்டி, பேரிகை, நெரிகம், சின்ரான்தொட்டி, பி.குருபரப்பள்ளி, பண்ணப்பள்ளி, கும்பளம், காலிங்காவரம், பஸ்த்தலப்பள்ளி, அத்திமுகம், வெங்கடேசபுரம், ஆலுர், மைதாண்டப்பள்ளி, செம்பரசனப்பள்ளி, சிம்புல் திராடி, பெத்தசீகரளப்பள்ளி, எ.செட்டிப்பள்ளி, அனகொண்டப்பள்ளி, மாரண்டப்பள்ளி, கானலட்டி, காமன் தொட்டி, கோனேரிப்பள்ளி, பேரன்டப்பள்ளி, புக்காசாகரம், மருதாண்டப்பள்ளி, சூளகிரி, டோரிப்பள்ளி, பீர்ஜப்பள்ளி, சானமாவு, கொம்மேபள்ளி, உத்தனப்பள்ளி, டி.குருபரப்பள்ளி, சாமனப்பள்ளி, அயர்னப்பள்ளி, தியாகசனப்பள்ளி, எனுசோனை, பங்கனஅள்ளி, ஒசஅள்ளி, சென்னப்பள்ளி, மேலுமலை, இம்மிடி நாய்க்கனப்பள்ளி, உல்லட்டி, துப்பு கானப்பள்ளி ஆகிய 42 ஊராட்சிகளில் காலம் காலமாக கொத்தமல்லி, புதினாவை நம்பியே விவசாயிகள் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிர் செய்து வருகின்றனர்.

சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் பயிர் செய்த தோட்டங்களில் அறுவடை செய்த காய்கறி, பூக்கள் ஓசூர் மார்க்கெட்டுக்கு எடுத்து சென்று வியாபாரம் செய்வார்கள். கொத்தமல்லி, புதினாகளை மூட்டை, மூட்டையாக கட்டி தலையில் சுமந்து பின்பு வாகனங்களில் ஏற்றி ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக சூளகிரி-உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கொத்தமல்லி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வார்கள்.

இதைத்தொடர்ந்து 2006-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக அந்த இடம் அரசு கையகப்படுத்தப்பட்டது. இதனால் சூளகிரி-உத்தனப்பள்ளி சாலையில் மார்க்கெட் இல்லாமல் 15 ஆண்டுகளாக விவசாயிகள், வியாபாரிகள் மிகவும் வருத்–தத்தில் இருந்து வந்தனர். இதனையடுத்து கொத்தமல்லி, புதினாவுக்கு என்று விற்பனை செய்ய இடம் வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். பின்பு வட்டார வளர்சி அலுவலக அதிகாரிகள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஒரமாக அலகுபாவி எதிரே உள்ள மலை அடிவாரத்தில் அரசு நிலத்தில் இடம் ஒதுக்கப்பட்டது.

அந்த இடம் குண்டும், குழியும் உள்ளதால், வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் இருந்து வந்தது. போதிய வசதிகள் இல்லாததால், பல வியாபாரிகள் மருதாண்டபள்ளி, பாளையம், ஒமதேப்பள்ளி என பிரிந்து சென்று பல பகுதிகளில் சாலை ஓரங்களில் ஆபத்தான நிலையில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கொத்தமல்லி, புதினா பல ஆயிரம் டன் கணக்கில் லாரிகளில் விவசாய பொருட்களை விவசாயிகள் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

அவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் கொத்தமல்லி, புதினா வகைகள் கீரைகள் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், சென்னை, சேலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா பல வெளி மாநிலம், வெளிநாடு என அனைத்து பகுதிகளில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய ஒரு பகுதியாக சூளகிரி அமைந்துள்ளது.

அனைவரின் மனதில் இடம் பிடித்த ஒன்றான கொத்தமல்லி, புதினா ஏற்றுமதி செய்வதற்காக சூளகிரி பகுதியில் அரசு தானாக முன்வந்து 6 ஏக்கரில் நவீன கட்டிடம், சிமெண்ட் சாலை, வாகன நிறுத்துவதற்கான இடவசதிகள், கழிப்பிடம், சி.சி.டி.வி. கேமரா, மின்விளக்கு, குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நவீன மாயமாக்கப்பட்ட மார்க்கெட்டு ஒன்றை அமைத்து தரவேண்டும் என்று சூளகிரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News