உள்ளூர் செய்திகள்

நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு

Published On 2022-11-15 08:07 GMT   |   Update On 2022-11-15 08:07 GMT
  • பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.

ராசிபுரம்:

ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் யோகநாயகி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராசிபுரம் வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 185 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.

ஆதி, பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், சிறு, குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி முன் பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும் புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்க உள்ள விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மெயின் பைப் லைன் அமைக்க அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம், புதியதாக பயன்பாட்டிற்கு கொண்டுவரும் கிணறு அல்லது போர்வெல்லில் மின்மோட்டார் பொருத்திக் கொள்ள ரூ.15 ஆயிரம் மற்றும் பாசனத்திற்காக நீர் தேக்க தொட்டி 116 கன மீட்டர் அளவில் அமைத்திட மானியமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News