உள்ளூர் செய்திகள்

கூடலூர் அருகே வீட்டில் பதுக்கிய வெடி மருந்துகள் பறிமுதல்- மோப்பநாய் உதவியுடன் வனத்துறையினர் நடவடிக்கை

Published On 2022-07-06 10:25 GMT   |   Update On 2022-07-06 10:25 GMT
  • போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த ஒரு கும்பலை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.
  • நாடுகாணி வனச்சரகர் வீரமணி உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வருவாய், போலீசார் இணைந்து கைது செய்யப்பட்ட புஷ்பராஜ் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

ஊட்டி:

கூடலூர் தாலுகா மரப்பாலம் அருகே பால்மேடு பகுதியில் ஒரு கும்பல் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக தேவாலா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 3- ம் தேதி நள்ளிரவு போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த ஒரு கும்பலை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.

தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த 2 மூட்டைகளை சோதனை செய்த போது கடமான் இறைச்சி 50 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது கள்ளத்துப்பாக்கி மூலம் கடமானை வேட்டையாடியது தெரிய வந்தது.

மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கி தோட்டாக்கள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பால் மேட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 38), ஓ வேலி பேரூராட்சி பெரிய சூண்டியைச் சேர்ந்த மைக்கேல் (30) அருண் (26) மற்றும் சூண்டி மரப்பாலத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் (33) ஆகியோரை கைது செய்தனர்.

மோப்ப நாயுடன் வீட்டில் சோதனை பின்னர் போலீசார் பறிமுதல் செய்த கடமான் இறைச்சியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து நாடுகாணி வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் உதவி வன பாதுகாவலர்கள் சீனிவாசன், ஷர்மிலி, நாடுகாணி வனச்சரகர் வீரமணி உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வருவாய், போலீசார் இணைந்து கைது செய்யப்பட்ட புஷ்பராஜ் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது முதுமலை வனத்துறைக்குச் சொந்தமான மோப்ப நாயும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. தொடர்ந்து வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள், 250 கிராம் வெடி மருந்து பொருட்கள், தலையில் அணியக்கூடிய டார்ச் லைட் ஆகியவற்றை வனத்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

பின்னர் போலீசாரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். தொடர்ந்து வன குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News