உள்ளூர் செய்திகள்

கோவையில் விலை உயர்ந்த சைக்கிள் திருட்டு

Published On 2022-06-15 09:33 GMT   |   Update On 2022-06-15 09:33 GMT
  • அவர் தனது விலை உயர்ந்த சைக்கிளில் வெளியே சென்று வீடு திரும்பினார்.
  • துடியலூர் வெற்றிலைகாளி பாளையம் மாரியம்மன் கோவில் 2-வது வீதியை சேர்ந்த சூர்யா (23) என்பதும் கூலிவேலை செய்து வந்ததும் ெதரியவந்தது.

கோவை:

கோவை துடியலூர் என்.ஜி.ஜி.ஓ காலனி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் நடேஷ்குமார் (வயது 42). இவர் சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

நடேஷ்குமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிளை வைத்துள்ளார். சம்பவத்தன்று அவர் தனது விலை உயர்ந்த சைக்கிளில் வெளியே சென்று வீடு திரும்பினார். அங்கு சைக்கிள் நிறுத்தும் பகுதியில் தனது சைக்கிளை நிறுத்தி வீட்டுக்குள் சென்றார்.

சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரது சைக்கிளை திருடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

உடனே நடேஷ்குமார் துரத்தி அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் அந்த வாலிபரை துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் துடியலூர் வெற்றிலைகாளி பாளையம் மாரியம்மன் கோவில் 2-வது வீதியை சேர்ந்த சூர்யா (23) என்பதும் கூலிவேலை செய்து வந்ததும் ெதரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News