உள்ளூர் செய்திகள்

ஜவுளி கடை உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-08-26 10:03 GMT   |   Update On 2022-08-26 10:03 GMT
  • ரமாதேவி வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதிரேசன் மதுபோதையில் இருந்துள்ளார்.
  • படுக்கையறையில் உள்ள தொட்டில் மாட்டும் கொக்கியில் கதிரேசன் வயரால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

ஈரோடு, ஆக. 26-

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சின்ன பிடாரியூரைச் சேர்ந்தவர் கதிரேசன் (38). இவரது மனைவி ரமாதேவி (34). இவர்களுக்கு 11 மற்றும் 9 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கதிரேசன் சென்னிமலை பெரியார் நகரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். ரமாதேவி அவருக்கு உதவியாக ஜவுளி கடையை கவனித்து வந்தார். கதிரேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் வீட்டுக்கு சென்ற கதிரேசன் மாலை 5 மணி ஆகியும் ஜவுளி கடைக்கு வரவில்லை.

இதையடுத்து ரமாதேவி வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதிரேசன் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது ரமாதேவி இனிமேல் குடித்துவிட்டு ஜவுளி கடைக்கு வரவேண்டாம் என கூறியதாகத் தெரிகிறது.

அதைக்கேட்ட கதிரேசன் உடனடியாக படுக்கையறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

உடனடியாக ரமாதேவி கதிரேசனின் சகோதரர் மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து படுக்கையறை ஜன்னலை உடைத்து பார்த்தபோது படுக்கையறையில் உள்ள தொட்டில் மாட்டும் கொக்கியில் கதிரேசன் வயரால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று கதிரேசனை மீட்டுப் பார்த்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரமாதேவி அளித்த புகாரின்பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News