பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு 700 கனஅடி தண்ணீர் திறப்பு
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
- கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.26 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,367 கன அடியாக நீர்வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் மீண்டும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 4.65 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.86 அடியாகவும் உள்ளது.