உள்ளூர் செய்திகள்

சாலை ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

Published On 2023-04-29 15:00 IST   |   Update On 2023-04-29 15:00:00 IST
  • சாலையை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
  • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படாததால் தோல்வியில் முடிந்தது.

சென்னிமலை:

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் சிறுக்களஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட தளவாய்பாளையம் புதூர் என்ற ஊர் வழியாக சென்று அங்குள்ள ரெயில்வே நுழைவு பாலத்தை கடந்தால் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட இணைப்பு சாலை உள்ளது.

இந்த சாலையை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து விட்டதாகவும், இது குறித்து புகார் கொடுத்தும் சிறுக்களஞ்சி ஊராட்சி தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கடந்த 26-ந் தேதி சிறுக்களஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் சிறுக்களஞ்சி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.

பின்னர் அதிகாரிகள் அங்கு சென்று பொது–மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சுமூக தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காயத்ரி இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், பாஸ்கர் பாபு, சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் சார்பில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் பேசும்போது,

ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தில் 40 அடி அகலத்தில் சாலையை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பின்னர் சாலை ஆக்கிரமிப்பு பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பதாக பொதுமக்கள் கூறிவிட்டு சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News