உள்ளூர் செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.55 லட்சம் மோசடி; குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

Published On 2022-11-19 14:45 IST   |   Update On 2022-11-19 14:45:00 IST
  • ஏல சீட்டுகள் நடத்தியதில் மொத்தம் ரூ.55 லட்சம் வரை மோசடி செய்து உள்ளது தெரிய வந்துள்ளது.
  • புகாரின் பேரில் 2 பேர் மீது அம்மாபேட்டை போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை கேட் பகுதியை சேர்ந்த முருகேசன் மற்றும் நெரிஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த சரவணன் ஆகிய 2 பேரும் ரூ.5.லட்சம், ரூ.10 லட்சம் என பல்வேறு ஏல சீட்டுகள் நடத்தி வந்துள்ளனர்.

ஏலச்சீட்டில் மாதந்தோறும் பணம் செலுத்தினால் வட்டியுடன் அதிக லாபம் பெறலாம் என்ற எண்ணத்தில், இவர்களுக்கு அறிமுகமான நண்பர்கள் மூலம் பவானி ராணா நகர் பகுதியை சேர்ந்த வேணி என்பவர் உள்பட 4 பேர் ஏலச்சீட்டில் மாதம் தோறும் பணம் செலுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் வேணி இதுவரையிலும் ரூ.11 லட்சம் ரூபாய் வரை ஏல சீட்டில் மாதம் தோறும் சீட்டுத் தொகையாக செலுத்தியுள்ளார். ஏலச்சீட்டு முடிந்த பின்னர் ஏல சீட்டு நடத்திய சரவணன் மற்றும் முருகேசன் ஆகியோரிடம் பணம் கேட்டபோது முறையான பதில் இல்லாமலும், வேணி ஏலச்சீட்டில் செலுத்திய பணத்தை திருப்பி தராமலும் தாமதம் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட வேணி உள்பட 4 பேரும் ஏல சீட்டை நம்பி இழந்த ரூ.11 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கான வட்டி என மொத்த பணத்தையும் மீட்டு தர கோரியும், முருகேசன் மற்றும் சரவணன் ஆகிய 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மாபேட்டை போலீசில் புகார்கொடுத்தனர். புகாரின் பேரில் 2 பேர் மீது அம்மாபேட்டை போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

முருகேசன், சரவணன் ஆகிய 2 பேரும் இதுபோல் பல்வேறு ஏல சீட்டுகள் நடத்தியதில் மொத்தம் ரூ.55 லட்சம் வரை மோசடி செய்து உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த மோசடி வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News