உள்ளூர் செய்திகள்

ஈரோடு கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

Published On 2023-11-05 13:27 IST   |   Update On 2023-11-05 13:27:00 IST
  • குடும்பமாக வந்து ஜவுளி கடையில் மக்கள் குவிந்தனர்.
  • இந்த பகுதியில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

ஈரோடு:

இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் கடந்த சில நாட்களில் கடை விதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

அதன்படி இன்று ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் பார்க், ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, மேட்டூர் ரோடு, சக்தி ரோடு பகுதியில் வழக்கத்தை விட மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

குறிப்பாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் சாலையின் இரு புறம் 100-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், நகை கடைகள், பேன்சி கடைகள் உள்ளதால் காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இன்று விடுமுறை நாள் என்பதால் குடும்பமாக வந்து ஜவுளி கடையில் மக்கள் குவிந்தனர். சாதாரண சின்ன கடை முதல் பெரிய ஜவுளி கடை வரை மக்கள் கூட்டமாகவே இருந்தது.

இதேபோல் பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் இன்று அதிக அளவில் காணப்பட்டது. குழந்தைகள் தங்களுக்கு பிடித்த பட்டாசுகளை வாங்கி சென்றனர். இதனால் இந்த பகுதியில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. போக்குவரத்து போலீசார் நெரிசலை சீரமைத்தனர்.

கூட்ட நெரிசலை பயன் படுத்தி சில மர்ம நபர்கள் பொதுமக்களிடம் பணம், செயின் போன்றவற்றை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் ஈரோடு ஜி. எச். ரவுண்டானா, பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு உட்பட முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் மாநகரில் 16 முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு அதன் நடவடிக்கைகள் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது தவிர போலீசார் விழிப்புணர்வு நோட்டீஸ் அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

Tags:    

Similar News