அய்யப்பன் கோவில் கும்பாபிேஷகம் நாளை நடக்கிறது
- கோவிலில் உள்ள விமானங்கள், கருவறை, மகா மண்டபம் ஆகியவை பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
- விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கோபுர கலசங்கள் வைத்தல், முதல் கால யாக பூஜை, நடந்தது.
சென்னிமலை,
சென்னிமலை டவுன், காங்கேயம் ரோடு, ஐயப்பா நகரில் அய்யப்பன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள விமானங்கள், கருவறை, மகா மண்டபம் ஆகியவை பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
பின்னர் இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, நடந்தது.
பக்தர்கள் கொடிவேரி சென்று தீர்த்தம் கொண்டு வந்தனர். பின்னர் தீர்த்த குடங்களுடன் பக்தர்கள் அரச்சலூர் ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து ஐயப்பா நகரில் உள்ள கோவிலுக்கு சென்றனர்.
அங்கு விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கோபுர கலசங்கள் வைத்தல், முதல் கால யாக பூஜை, நடந்தது. தொடர்ந்து இன்று காலை 2-ம் கால யாக பூஜையும், மாலை 3-ம் கால யாக பூஜைகள் நடக்கிறது.
கும்பாபிஷேக விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை ஐயப்ப சாமி கோவில் அர்ச்சகர் ஜி.மணிவாசக குருக்கள் தலைமையில் தபராஜ் சிவாச்சாரியார், ராஜேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைக்கிறார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய திருப்பணி குழுவினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்துள்ளனர்.