போதிய மழை இல்லாததால் சீத்தாப்பழம் விளைச்சல் பாதிப்பு
- தற்பொழுது ஒரு சில செடிகளில் மட்டும் காய்கள் பிடித்து வருகிறது.
- நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 கூடைகள் வரை மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ள பிக்கிலி, மலையூர் , வாரக்கொல்லை உள்ளிட்ட மலை கிராமங்களில் சுமார் 15 ஏக்கர் பரப்பில் சீத்தாப்பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இங்கு நிலவும் சீதோசன நிலையால் சீத்தாப்பழம் அதிக அளவில் மகசூல் தருகிறது. மலை கிராமத்தில் விளையும் சீத்தாப்பழங்களை வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து சென்னை, கோவை, கேரளா போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சீத்தாப்பழம் சீசன் நிலவுகிறது.
விவசாயிகள் சீத்தா பழங்களை அறுவடை செய்து கூடைகளில் எடுத்து வந்து வெளியூரிலிருந்து மலையூர் கிராமத்திற்கு வருகை தரும் வியாபாரி களிடம் விற்பனை செய்து வருகின்றனர். நல்ல தேர்ந்தெ டுக்கப்பட்ட பெரிய அளவிலான பழங்கள் சராசரி கிலோ ரூ.20-க்கும், கூடை 200 முதல் 250 ரூபாய் வரை என குறைந்த விலையில் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் சீத்தாப்பழம் விளைச்சல் அதிகமாக இருந்தது. இதனால் தினந்தோறும் டன் கணக்கில் மலை கிராம மக்கள் விற்பனை செய்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு சீத்தாப்பழம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்தனர். இதனால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு பருவ மழை ஏமாற்றியதால், சீத்தாப்பழம் சீசன் தொடங்குகின்ற நேரத்தில் செடிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இதனால் செடிகளில் வைக்கின்ற காய்கள் முழுவதும் தண்ணீர் இன்றி காய்ந்து கருகி, கீழே கொட்டியது. மேலும் மழை தாமதமாக பெய்து வருவதால், தற்பொழுது ஒரு சில செடிகளில் மட்டும் காய்கள் பிடித்து வருகிறது.
ஆனாலும் வெள்ளை பூச்சிகள் தாக்குதல் இருப்பதால், அந்த பழங்களையும் வியாபா ரிகள் வாங்குவதில்லை. இதனால் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு தினமும் 20 முதல் 30 கூடை வரை அறுவடை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விவசாயிகள் ஓரு கூடை அறுவடை செய்வது என்பதே சவாலாக இருந்து வருகிறது.
இதனால் தினந்தோறும் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்ட வந்த சீத்தா பழங்கள், தற்பொழுது நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 கூடைகள் வரை மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலும் வியாபாரிகள் யாரும் மலை மீது வராததால்,விவசாயிகளே ஒன்றிணைந்து பிக்கப் வாகனங்கள் மூலம் பாப்பாரப்பட்டி சந்தைக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர்.
மேலும் போக்குவரத்து வசதி இல்லாததால், ஒரு கூடை 300 ரூபாய் வரை விற்பனை ஆகின்ற நிலையில், வண்டி வாடகை கூடைக்கு 100 ரூபாய் கொடுக்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு சீத்தாப்பழம் விற்பனையில் போதிய வருவாய் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.