உள்ளூர் செய்திகள்

காவிரி ஆற்றில் மூழ்கி தருமபுரி மீன் வியாபாரி சாவு

Published On 2023-04-27 09:18 GMT   |   Update On 2023-04-27 09:18 GMT
  • சூர்யா ஒரு கரையில் இருந்து மறுக்கரைக்கு நீந்தி சென்றுள்ளார்.
  • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கி இறந்த சூர்யாவின் உடலை மீட்டனர்.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம், எல்.ஐ.சி அலுவலகம் அருகே உள்ள நரசியர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சூர்யா (வயது31). இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் தனது சித்தியின் மூன்று மாத துக்க காரியத்திற்கு குடும்பத்தினருடன் ஒகேனக்கல் வந்துள்ளார்.

ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த இவர்கள் பின்னர் நாடார் காலனி அருகே குளித்தனர். அப்போது சூர்யா ஒரு கரையில் இருந்து மறுக்கரைக்கு நீந்தி சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் திரும்பி வந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதனால் அவர் ஆற்றில் மூழ்கி உள்ளார்.

அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. உடனடியாக உறவினர்கள் ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கி இறந்த சூர்யாவின் உடலை மீட்டனர்.

இதை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். பின்னர் மீட்கப்பட்ட சூர்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 300 அடிக்கு குறைவாக இருந்த போதிலும் அறிவிப்பு பலகைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமையால் காவிரி ஆற்றில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆகவே உரிய பாதுகாப்பு மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News