உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லி-போரூர் இடையே ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம்

Published On 2025-04-18 12:53 IST   |   Update On 2025-04-18 12:53:00 IST
  • முதல்கட்ட சோதனை கடந்த மார்ச் 20-ந் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.
  • 2-வது கட்ட சோதனை ஓட்டத்தை இம்மாத இறுதியில் நடத்த உள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

பூந்தமல்லி பணிமனை நிலையத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீ நீளம் கொண்ட வழித்தடத்தில் போரூர் வரையிலான மேம்பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கென தலா 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பூந்தமல்லி- போரூர் இடையே கடந்த மாதம் ஓட்டுனர் இல்லாமல் ரெயிலை இயக்கி முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

மேலும் பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம், கடந்த மார்ச் 20-ந் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பூந்தமல்லி - போரூர் தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட சோதனை ஓட்டத்தை இம்மாத இறுதியில் நடத்த உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News