உள்ளூர் செய்திகள்

பழனி மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.

விடுமுறை நாளையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2023-04-23 11:31 IST   |   Update On 2023-04-23 11:31:00 IST
  • வாரவிடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.
  • கூட்டம் காரணமாக சுமார் 2½ மணிநேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய முடிந்தது.

பழனி:

தமிழகத்தில் சிறந்த ஆன்மீக தலமாகவும், முருகப்பெருமானின் 3ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், வாரவிடுமுறை நாட்களிலும் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகை யில் வாரவிடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.

குறிப்பாக மலைக்கோவி லின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின்இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எனவே பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.

கூட்டம் காரணமாக சுமார் 2½ மணிநேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய முடிந்தது. மேலும் அதிகாலை முதலே கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதிகள் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் சாமி தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் தங்களது ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

Tags:    

Similar News