உள்ளூர் செய்திகள்

சிறுமி கடத்தல் தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை- எஸ்.பி.யிடம், பெற்றோர் புகார்

Published On 2023-06-01 10:21 GMT   |   Update On 2023-06-01 10:21 GMT
  • வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை
  • போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அப்பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி இரவு தனது வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் அசோக் என்பவர் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், கிருஷ்ணகிரி அடுத்த மாதிநாயனப்பள்ளியை சேர்ந்த அசோக் என்பவர், ஏற்கனவே தங்கள் மகளை கடத்தி சென்றார்.

அவரிடமிருந்து சிறுமியை மீட்டு வந்தோம். இந்த நிலையில் மீண்டும் சில நாட்களிலேயே கடைக்கு சென்ற தங்கள் மகளை அசோக் என்பவர் கடத்தி சென்றுள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, நான்காம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளான். அசோக், மாதிநாயனப்பள்ளியை சேர்ந்த அழகேசன், முத்து, ராஜேஷ், சின்னதிம்மன் ஆகியோர் உதவியுடன் தங்கள் மகளை கடத்தியுள்ளார்.

தங்கள் மகள் உயிருடன் உள்ளாரா என்று பயமாக உள்ளது. இது குறித்த விவரங்களுடன், மகளை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூரிடம் புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News