மாசி திருவிழாவின் 5-ம் நாள்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று மாலை குடவருவாயில் தீபாராதனை
- திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- 6-ம் திருவிழாவான நாளை காலை 7 மணிக்கு சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வீதிஉலா
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது வருகிறது.
4-ம் திருவிழாவான நேற்று மாலை 6.30 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது.
குடவருவாயில் தீபாராதனை
5-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. இன்று மேல கோவிலில் இரவு 7.30 மணிக்கு மேல் குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்பாளும் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
6-ம் திருவிழாவான நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. காலை 7 மணிக்கு சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
வெற்றிவேர் சப்பரம்
7-ம் திருவிழாவான வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கும்ப லக்னத்தில் சண்முகபெருமான் உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்தல், அங்கு சுவாமிக்கு அபிசேகம் அலங்கார தீபாராதனை நடக்கிறது.
அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திக் கோலத்தில் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
பச்சை சாத்தி
8-ம் திருவிழாவான 4-ந்தேதி காலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதியுலா நடக்கிறது. பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் பச்சை சாத்தி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
9-ம் திருவிழாவான 5-ந்ேததி இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருவிழாவான 6-ந்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள், காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.