திண்டுக்கல் உழவர் சந்தைக்கு குறைந்த அளவே தக்காளிகள் வந்தது.
தொடர் மழை எதிரொலி:தக்காளி வரத்து குறைவால் விலை உயர்வு
- திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது.
- தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மற்றும் அய்யலூர், வடமதுரை, வேடசந்தூர், அகரம், ரெட்டி யார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த தக்காளி திண்டுக்கல் உழவர் சந்தை மற்றும் காந்தி காய்கறி மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. திண்டுக்கல் உழவர் சந்தையில் 10 கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்று 2 டன் மட்டுமே தக்காளி வரத்து வந்தது.
இதனால் கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டது. வரத்து குறைவு காரணமாக திண்டுக்கல் உழவர் சந்தையில் தக்காளி கடைகள் குறைவாகவே இருந்தது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.24க்கு விற்கப்பட்டது. இன்று வரத்து குறைந்ததை அடுத்து விலை உயர்ந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் செடியில் இருந்து காய்கள் உதிர்ந்து விட்டது. மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நீடித்தால் மேலும் விலை உயரும் என்று தெரிவித்தனர்.
இந்த தக்காளி விலை உயர்வு இல்லத்தரசிகளை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.