ரூ.323.10 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்
- மொத்தம் 81.89 கி.மீ நீளத்திற்கு 19 பணிகள் ரூ.312 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்த 14 சாலை பணிகளும், இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம், கே.பூசாரிப்பட்டி முதல் பெரிய கோட்டப்பட்டி வரை திட்டம் சாராப்பணிகள், சிறப்பு பழுதுபார்த்தல் திட்டத்தின் கீழ் ரூ.62 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலை பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் மொத்தமாக 1738.139 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் மாநில நெடுஞ்சாலைகள் 279.953 கி.மீ., மாவட்ட முக்கிய நெடுஞ்சாலைகள் 262.755 கி.மீ. மற்றும் இதர மாவட்ட சாலைகள் 1190.431 கி.மீ சாலைகள் ஆகும்.
2022-23-ம் நிதியாண்டில், ஒருங்கிணைக்கப்பட்ட சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொழில் நகரமான ஓசூர், ராயக்கோட்டை பகுதிகளில் மாநில நெடுஞ்சாலை 33.430 கி.மீ நீளம், ரூ.260.50 கோடி மதிப்பில் 5 பணிகள் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளும், தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் 14.10 கி.மீ. நீளமுள்ள 3 - மாவட்ட சாலைகள் ரூ.17 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் இருவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதே போல், மாவட்ட சாலைகளை மேம்படுத்தும் பொருட்டு கிருஷ்ணகிரி அணை சாலை, பர்கூர் சிந்தகம்பள்ளி சாலை, பண்ணந்தூர், பந்தாரஹள்ளி, காரப்பட்டு, கல்லாவி, போச்சம்பள்ளி, கப்பல்வாடி, ஒரப்பம், செந்தாரப்பள்ளி மற்றும் மலைகிராமமான பெட்டமுகிலாளம், பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.33 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 11 சாலைப் பணிகள் என மொத்தம் 81.89 கி.மீ நீளத்திற்கு 19 பணிகள் ரூ.312 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதே போல் 2022-23-ம் ஆண்டில் திட்டம் சாரா பணிகள் மூலம், பூசாரிப்பட்டி, பெரியகோட்டப்பள்ளி, கரடிஹள்ளி, நல்லூர், வரட்டணப்பள்ளி, வெலகலஹள்ளி, பீர்பள்ளி, அத்திகானுர், போச்சம்பள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் 35.70 கி.மீ. நீளமுள்ள 14 சாலைகள் ரூ.11 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த 14 சாலை பணிகளும், இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சரவணன், உதவிக் கோட்டப்பொறியாளர் ஜெயகுமார், உதவிக் கோட்டப்பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) பத்மாவதி, உதவிப்பொறியாளர்கள் ரியாஸ் முகமது, பிரவீன்குமார் உள்ளிட்டடோர் உடனிருந்தனர்.