உள்ளூர் செய்திகள்

பாளை ஆயுதப்படை மைதானத்தில் இன்று அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீசார்.

வருகிற 26-ந்தேதி வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள்

Published On 2023-01-21 15:10 IST   |   Update On 2023-01-21 15:10:00 IST
  • பாளை வ.உ.சி மைதானத்தில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா நடைபெறும்.
  • ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

நெல்லை:

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பாக பாளை வ.உ.சி மைதானத்தில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா நடைபெறும்.

வ.உ.சி. மைதானம்

அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீன கேலரிகளுடன் மைதானம் கட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் நடைபெற்றதால் அங்கு கடந்த 2 ஆண்டுகளாக அணிவகுப்பு நடைபெற வில்லை. அதற்கு பதிலாக பாளை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

தற்போது பணிகள் நிறைவடைந்து மைதானம் திறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு வருகிற 26-ந்தேதி குடியரசு தின விழாவை பாளை வ.உ.சி. மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அணிவகுப்பு ஒத்திகை

இதனையொட்டி ஆயுதப்படை மைதானத்தில் இன்று முதல் குடியரசு தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதில் போலீஸ்காரர்கள், தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு படையினர், என்.சி.சி. மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

இந்த ஆண்டு குடியரசு தினவிழாவுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலும் குடியரசு தினவிழாவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

மேலும் வ.உ.சி. மைதானம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி மையம் உள்பட முக்கிய பகுதிகளிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News