உள்ளூர் செய்திகள்

வல்வில் ஒரி மன்னனின் சிறப்பை சித்தரிக்கும் ஓவியம்

கொல்லிமலை பாதை தடுப்பு சுவர்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ண ஓவியங்கள்

Published On 2022-08-03 08:12 GMT   |   Update On 2022-08-03 08:12 GMT
  • நாமக்கல் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான கொல்லிமலை உள்ளது.
  • மலைப்பாதை தடுப்பு சுவர்களில், வல்வில் ஓரி மன்னனின் புகழைப் பரப்பும் வகையில், ஆங்காங்கே வண்ண ஓவியங்கள் வரைந்துள்ளனர்.

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான கொல்லிமலை உள்ளது. கொல்லிமலைக்கு, அடிவாரத்தில் இருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். கொல்லிமலைக்கு வரலாற்று பெருமையும், அகத்தியர், திருமூலர், போகர், கோரக்கர், கொங்கணவர், பாம்பாட்டி உள்ளிட்ட, 18 சித்தர்கள் இங்கு தவம் செய்த பெருமையும் உள்ளது. இதற்கு சான்றாக, குகைகள் அமைந்துள்ளன. கடையேழு வள்ளல்களின் ஒருவரான வல்வில் ஓரி ஆண்ட நாடாகவும் கொல்லிமலை திகழ்கிறது.

இங்கு ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி, சிற்றருவி என பல அருவிகள் உள்ளன. இதனால், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், இங்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கொல்லிமலையில், ஆண்டுதோறும் ஆடி, 18-ல், ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இங்குள்ள ஆற்றில், பொதுமக்கள் புனித நீராடி, அறப்பளீஸ்வரரை வழிபடுவர்.

மேலும், தமிழக அரசு சார்பில், கொண்டாடப்படும் வல்வில் ஓரி விழா, நேற்று தொடங்கியது. சிறந்த சுற்றுலாதலமாக விளங்கும் கொல்லிமலைக்கு, தமிழகம் முழுவதும் இருந்து, ஏராளமான சுற்றுலாப்பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கவரும் வகையில், நெடுஞ்சாலை, வனம், சுற்றுலா மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், மலைப்பாதை தடுப்பு சுவர்களில், வல்வில் ஓரி மன்னனின் புகழைப் பரப்பும் வகையில், ஆங்காங்கே வண்ண ஓவியங்கள் வரைந்துள்ளனர். அவற்றை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். பலர் ஆர்வமாக, தங்களது மொபைல் போனில் 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர்.

கொல்லிமலை வரும் சுற்றுலா பயணிகளை கவர மலைப்பாதை தடுப்பு சுவர்களில் வண்ண ஓவியம்.

Tags:    

Similar News