உள்ளூர் செய்திகள்

ஆற்றில் மூழ்கி பலியானவர்கள் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

Published On 2023-05-09 09:24 GMT   |   Update On 2023-05-09 09:24 GMT
  • கல்லூரிக்கு சென்றவர் தனது நண்பர்கள் 5 பேருடன் கல்லணைக்கு குளிக்க வந்தார்.
  • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பூதலூர்:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவரம்பூர் திருவேங்கடம் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அருண் பாலாஜி (வயது 18).

திருச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி அறிவியல் பாடப் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கல்லூரிக்கு சென்றவர் தனது நண்பர்கள் 5 பேருடன் கல்லணைக்கு வந்தார். பின்னர் அவர்கள் 6 பேரும் கல்லணைக்கு அருகில் காவிரி ஆற்றில் இறங்கி குளித்தனர்.

அப்போது பாலாஜி ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் தண்ணீரில் பாலாஜியை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து தோகூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினர் அதிகாரி சகாயராஜ், போக்குவரத்து அதிகாரி முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காவிரி ஆற்றில் இறங்கி தேடி மாணவன் அருண்பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News