உள்ளூர் செய்திகள்

இளவயது திருமணங்களை தடுத்திட வேண்டும் கலெக்டர் அறிவுரை

Published On 2023-05-29 09:20 GMT   |   Update On 2023-05-29 09:20 GMT
  • இளம் வயது கருவுருதல் பற்றி வட்டார அளவில் ஆய்வு செய்ய வேண்டும்.
  • எடை குறைவாக பிறந்த குழந்தைகளை தனிகவனம் கொண்டு ஒவ்வொரு மாதமும் எடை அதிகரிப்பை கண்காணிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுகாதாரத்துறை, தொழுநோய் தடுப்பு, காசநோய் தடுப்பு சார்பாக, அரசு மருத்துவமனைகள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து வட்டார மருத்துவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நடந்தது.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஏழை, எளிய மக்கள், மலை கிராம மக்கள் அரசு மருத்துவமனை மற்றும் துணை சுகாதார நிலையங்களில் சிறப்பான சிகிச்சை மேற்கொள்ளும் வகையில், பல்வேறு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்களின் இருப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் மகப்பேறு மரணங்களை அறவே தவிர்த்திட வேண்டும். பிறக்கிற அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் தடுப்பூசிகள் போட வேண்டும். பள்ளிச் சிறுவர்களுக்கு வழங்கப்படுகிற தடுப்பூசிகள் தவறாமல் வழங்க அனைத்து வட்டார மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்த 100 சதவீதம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்.

மேலும், இளம் வயது திருமணங்கள் முற்றிலும் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இளம் வயது கருவுருதல் பற்றி வட்டார அளவில் ஆய்வு செய்ய வேண்டும். எடை குறைவாக பிறந்த குழந்தைகளை தனிகவனம் கொண்டு ஒவ்வொரு மாதமும் எடை அதிகரிப்பை கண்காணிக்க வேண்டும். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில், நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், வட்டார மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News