உள்ளூர் செய்திகள்

முகமது சம்சுதீன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்ட காட்சி.


சுரண்டையை தூய்மை நகராட்சியாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்- நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

Published On 2022-12-25 13:46 IST   |   Update On 2022-12-25 13:46:00 IST
  • நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் சுரண்டை நகரை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
  • நகராட்சி பகுதிகளில் நோட்டீஸ் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் கூறினார்.

சுரண்டை:

சுரண்டை நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் சுரண்டை நகரை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன் தலைமை தாங்கினார். இதில் நகராட்சி ஊழியர்கள், பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அப்போது நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன் பேசுகையில், பொதுமக்கள் அனைவரும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சுகாதார பணியாளர்களிடம் வழங்க வேண்டும். ஓட்டல், மருத்துவமனையில் உள்ள கழிவுகளை செண்பக கால்வாயில் வீசாமல் துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நோட்டீஸ் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நகரின் முக்கியமான பகுதிகளில் நகராட்சியின் தூய்மை பணி குறித்து விளம்பரப்படுத்தப்படும். சுரண்டை நகராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து சுரண்டை பகுதியில் ஓட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணி நடைபெற்றது. அங்கு நகராட்சி சார்பில் தூய்மை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் கருப்ப சாமி, நகராட்சி மேஸ்திரி ராமர், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News