உள்ளூர் செய்திகள்

காலாப்பட்டு ஜெயிலில் கைதியிடமிருந்து செல்போன் பறிமுதல்

Published On 2022-09-06 09:19 GMT   |   Update On 2022-09-06 09:19 GMT
  • அதிநவீன செல்போன் மூலம் கைதிகள் தொடர்ந்து தங்களது கூட்டாளிகளிடம் பேசி வருகின்றனர்.
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகளின் அறையில் சோதனை நடத்தியபோது ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி:

புதுவையில் பெரும்பாலான குற்ற சம்பவங்கள் ஜெயிலில் உள்ள கைதிகள் தங்களது கூட்டாளிகள் மூலம் செய்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் ஏற்கனவே குற்றம்சாட்டி வந்தனர்.

கைதிகள் ஜெயிலில் இருந்தபடியே தங்களது கூட்டாளிகளுக்கு செல்போனில் பேசி எதிராளிகளை தீர்த்துக்கட்டுவது மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு புகார்கள் தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து ஜெயிலில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டது. ஆனாலும், அதிநவீன செல்போன் மூலம் கைதிகள் தொடர்ந்து தங்களது கூட்டாளிகளிடம் பேசி வருகின்றனர்.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஜெயிலில் கைதிகளின் அறைகளில் அடிக்கடி சோதனை நடத்தி அவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதனை மீறியும் கைதிகள் செல்போன்களை பயன்படுத்துகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகளின் அறையில் சோதனை நடத்தியபோது ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஜெயிலில் கைதிகளின் அறைகளில் ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஜெயில் வார்டன்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரவீன்குமார் என்பவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனை நடத்தியபோது அங்குள்ள கழிவறையில் செல்போன் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News